மாடித்தோட்டத்தில் வாழை பயிரிடும் முறை

Jan 24, 2023 - 00:00
 0  25
மாடித்தோட்டத்தில் வாழை பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் வாழை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
  • அகன்ற தொட்டி
  • அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
  • விதைக்கன்றுகள்
  • வாழையை தாங்கும் உபகரணங்கள்

தொட்டிகள்

இதன் தொட்டிகளை சிறு கற்களை நிரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.

அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.

தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் கன்று வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

விதைத்தல்

ஒரு தொட்டியில் அதிக பட்சமாக இரண்டு கன்றுகள் வரை நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

கன்றுகளை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தென்னை நார்க்கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

உரங்கள்

சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.

இதன் காய்ந்த பட்டைகளை உரித்து மூடாக்கு போல் போடலாம். பின்னர் அதுவே மக்கி சிறந்த உரமாக மாறிவிடும்.

பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூள், வேப்பங்கொட்டை தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். வேறு எந்த ஒரு பாதுகாப்பு முறையும் இதற்கு தேவைப்படாது.

இயற்கை உரங்களை இடுவதால் வாழையின் வேரானது நீடித்து இருக்கும். குலை தள்ளும் சமயத்தில் காற்று அடித்தால் சாய்ந்து விடாமல் இருக்க உறுதியான மரக்கட்டைகளை கொண்டு முட்டு கொடுக்க வேண்டும்.

காய்களை சாகுபடி செய்த பின் அவற்றை நீக்கி பக்கக்கன்றுகள் வளர அனுமதிக்க வேண்டும். அடியுரங்களை மாற்றுவதற்காக இரு தொட்டிகளில் மாற்றி மாற்றி வளர்க்கலாம்.

அறுவடை

திரண்ட வாழைதார்களை அறுவடை செய்து காய்களை பழுக்க வைக்க வேண்டும்.

வாழைமரம் பல்வேறு வகைகளில் உதவுவதால், வீட்டிற்கு ஒரு வாழை மரம் வளர்ப்பது சிறந்தது.

வாழை பயன்கள்:
  • உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
  • வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.
  • வாழைப்பழம் அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.
  • உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.
  • உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.
  • வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow