திருக்குறள் - குறள் 563

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வெருவந்தசெய்யாமை.


திருக்குறள் - குறள் 563


வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

மு.வரதராசனார் உரை:
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

பரிமேலழகர் உரை:
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
(வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.).

மணக்குடவர் உரை:
அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலையுடையனாயின் அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
குடிகள் மிகவும் அஞ்சுகின்ற செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாகிவிடில், அவ்வரசன் உறுதியாகக் கடிதல் கெடுவான்.

Translation:
Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.

Explanation:
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்