திருக்குறள் - குறள் 561
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வெருவந்தசெய்யாமை.

திருக்குறள் - குறள் 561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.
மு.வரதராசனார் உரை:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.
பரிமேலழகர் உரை:
'தக்காங்கு' நாடி - ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: தலைச்செல்லா வண்ணத்தால் 'ஒத்தாங்கு' ஒறுப்பது வேந்து - பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
(தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.).
மணக்குடவர் உரை:
குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தக்க முறையில் நடுவாக நின்று ஆராய்ந்து குற்றம் செய்தவன் பின்னும் அதனைச் செய்யாமல் இருக்கும் பொருட்டு அக்குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பவனே வேந்தனாவான்.
Translation:
Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.
Explanation:
He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்