திருக்குறள் - குறள் 304

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை.


திருக்குறள் - குறள் 304


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

மு.வரதராசனார் உரை:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.

சாலமன் பாப்பையா உரை:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

பரிமேலழகர் உரை:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள


மணக்குடவர் உரை:
நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? இஃது இன்பக்கேடு வருமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியான நகைப்பினையும் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியினையும் கொன்றுவிடுகின்ற கோபத்தைவிட வேறு பகையும் உண்டோ?.

Translation:
Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?.

Explanation:
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்