வெங்காயம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

May 25, 2022 - 00:00
 0  21
வெங்காயம் சாகுபடி முறை மற்றும் பயன்கள்

முதன் முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வெங்காயத்தை நம்முன்னோர்கள் உபயோகித்திருக்கிறார்கள்.

வெங்காயம் ஆசியாவிலிருந்து தான் உருவானதாக கருதப்பட்டாலும் கூட, வெங்காயம் காட்டுப் பயிராக, உலகின் மூலைமுடுக்கெல்லாம் முளைத்துள்ளது.

வெங்காயத்தை உணவாக மட்டுமல்ல, வழிபடும் பொருளாகவும் எகிப்தியர்கள் பார்த்திருக்கிறார்கள். பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு உணவாக வெங்காயத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியுள்ளனர்.

எப்படி பயிரிடுவது…?

சின்ன வெங்காயம் சாகுபடி
இரகங்கள்

கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 ஆகிய இரகங்கள் ஏற்றவை.

பருவம்

ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மண்ணின் கார, அமிலத் தன்மை 6-7க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத, செம்மண் நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 முதல் 3 முறை உழுது, கடைசி உழவின்போது ஒரு எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு உரமிட வேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார் பாத்திகள் அமைத்து, நிலத்தை தயார் செய்யவேண்டும்.

விதையளவு

ஒரு எக்டருக்கு விதை வெங்காயம் 1,500 கிலோ தேவைப்படும்.

விதைத்தல்

விதை வெங்காயத்தை 10 செ.மீ இடைவெளியில், பார் பாத்திகளின் இருபுறங்களிலும் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதை வெங்காயம் நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சினால் போதுமானது.

பெரிய வெங்காயம் சாகுபடி
இரகங்கள்

அடர் சிகப்பு ரகங்களில் என் – 53, அக்ரிபவுன்ட், வெளிர் சிகப்பு ரகங்களில் பூசா சிகப்பு, என்-2-4-1, அக்ரிபவுன்ட் ஆகிய இரகங்கள் உள்ளன.

பருவம்

தென்னிந்தியாவைப் பொறுத்த வரையில் மே – ஜூன் (கரீப் பருவம்) மாதங்களிலும், ஆகஸ்ட் – செப்டம்பர் (ரபி பருவம்) மாதங்களிலும் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் குளிர் கால வெங்காய சாகுபடியில் தான் சிறந்த மகசூல் கிடைக்கும்.

மண்

இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள சமமான, வளம் நிறைந்த மண் தேவைப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 7 முதல் 7.6 வரை இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் களிமண் நிலங்களை வெங்காய சாகுபடிக்கு தவிர்ப்பது நல்லது.

விதையளவு

எக்டருக்கு 5 முதல் 6 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி, நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்

ஒரு எக்டருக்கு நடவு செய்ய சுமார் 5 செண்ட் நாற்றங்கால் இடவசதி தேவைப்படும். நிலத்தை நன்கு கொத்தி, 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ என்ற அளவில் விஏஎம் என்ற பூசணக் கலவையை இடவேண்டும். நாற்றங்காலுக்கு, செண்டிற்கு ஒரு கிலோ என்ற அளவில் டிஏபி இட்டால் நல்ல வாளிப்பான நாற்றுகள் கிடைக்கும். நாற்றங்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைக்கவேண்டும். அப்போது தான் நாற்றுகள், செழுமையாக 40-45 நாட்களிலிலேயே தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

சாகுபடி செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்ய வேண்டும். 45 செ.மீ மற்றும் 10 செ.மீ இடைவெளியில் 45 நாள் வயதுடைய நாற்றுகளை நட வேண்டும்.
நீர் நிர்வாகம்

வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். நீருடன் பஞ்சகாவ்யா கலந்தும் கொடுக்கலாம். இதனால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

உரங்கள்

சின்ன வெங்காயம் சாகுபடி

நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் அடி உரமாக, எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும், 30 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும். பின்னர் நடவு செய்த 30 நாட்கள் கழித்து, 30 கிலோ தழைச் சத்தினை மேலுரமாக இட்டு மண்ணை அணைக்க வேண்டும்.

பெரிய வெங்காயம் சாகுபடி

வெங்காயம் பயிர் செய்யும்போது அடியுரமாக கடைசி உழவில் எக்டருக்கு 10 டன் தொழு உரம், 20 கிலோ தழைச்சத்து தரவல்ல 45 கிலோ யூரியா, 60 கிலோ மணிச்சத்து தரவல்ல 375 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 50 கிலோ பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும். மேலும் எக்டருக்கு 20 கிலோ துத்தநாக சல்பேட்டை இட வேண்டும். நாற்று நட்ட 30-ஆம் நாள், எக்டருக்கு 24 கிலோ தழைச்சத்தை மேலுரமாக இடவேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

சின்ன வெங்காயம் சாகுபடி
களை நிர்வாகம்

விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு
சாறு உறிஞ்சும் பூச்சி

இந்தப் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி

நோய்களில் இலைப்புள்ளி நோய் பரவலாக காணப்படும். அதை கட்டுப்படுத்த இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம், தெளிக்க வேண்டும்.

கீழ்த்தண்டு அழுகல் நோய்

ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அதிகம் காணப்படும் கோழிக்கால் சீக்கு, கீழ்த்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வடிகட்டி, ஒட்டும் திரவத்துடன் வெங்காயத் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலைக் கருகல் நோய்

இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை, 100 லிட்டர் நீரில் கலந்து, ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும்.

வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் 100 லிட்டருடன், 5 லிட்டர் புளித்த மோரைக் கலந்து தெளித்தால், காய் திரட்சியாக நல்ல நிறத்துடன் இருப்பதோடு, எடையும் அதிகரிக்கும்.

அறுவடை

வயலில் வெங்காயத்தின் இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர், இலைகளை பறித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

மகசூல்

ஒரு எக்டருக்கு 15 முதல் 20 டன் சின்ன வெங்காயம் கிடைக்கும்.

பெரிய வெங்காயம் சாகுபடி
களை நிர்வாகம்

விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேலுரமிட்டு மண் அணைத்து, நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி

இலைப்பேன் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இதை அதிகமாக தாக்கும். இலைப் புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு மாங்கோசெப் இரண்டு கிராம் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு இரண்டரை கிராம் இவற்றில் ஒன்றை ஒட்டும் திரவமான டீப்பாலுடன், ஒரு லிட்டர் நீருக்கு அரை மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

அறுவடை

வெங்காயம் நடவு செய்த 140 முதல் 150 நாட்களில் அறுவடை செய்யலாம்.

மகசூல்

எக்டருக்கு 6 முதல் 7 டன் மகசூல் கிடைக்கும்.

பயன்கள்
  • நான்கு அல்லது ஜந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  • வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
  • வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மற்றும் இழந்த சக்தியை மீட்டு தரும் தன்மை கொண்டது.
  • வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow