பருத்தி (Cotton)

Apr 21, 2023 - 00:00
 0  54
பருத்தி (Cotton)

பருத்தி ஒரு பணப்பயிர் ஆகும். பருத்தி செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது. ஆடை உற்பத்திக்கு பயன்படுவதினால் பல்லாயிரம் கணக்கான ஆண்டுகளாக பருத்தி விளைவிக்கப்படுகிறது.

தொழிற்புரட்சி இங்கிலாந்தில் உருவான கால கட்டத்தில் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பருத்தியும் ஒன்றானது. அதனால் இங்கிலாந்தில் பருத்தி தொழில் வளர்ச்சி படுவேகமாக வளர்ச்சி கண்டது.

தற்போது பருத்தியானது ஆசியா,ஐரோப்பா,ஆப்பிரிக்கா,அமெரிக்கா,ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் பருத்தி ஒரு முக்கியமான விவசாய பயிராக உள்ளது.

பருத்தி பயிரிடும் முறை:
  • கரிசல் மண் மற்றும் வண்டல் மண், செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
  • குளிர்கால இறவை பயிராக ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திலும், கோடைகால பயிராக பிப்ரவரி – மார்ச் மாதத்திலும், மானாவாரி பயிராக செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும் பயிரிடலாம்.
  • அடியுரமாக தொழு உரமும், தழையுரமும் பயன்படுத்தி நிலத்தை உழுது சமன்படுத்தவேண்டும் பின்பு 3 மீட்டர் இடைவெளிகளில் 3 செ.மீ ஆழத்திற்கு சிறு பாத்திகள் அமைத்து அதற்கு நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  • பின்பு ஒவ்வொரு பாத்திகளிலும் 2 மீட்டர் இடைவெளிகளில் விதைகளை நன்றாக ஊன்றி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • மண்ணில் வளம் குறைந்த இடங்களிலும், வெயில் குறைவான இடங்களிலும் இரண்டு விதைக்கலாம் ஊன்றினால் எதாவது ஒன்று முளைக்கும்.
  • விதைத்த பத்தாவது நாள் முளைக்காமல் இருக்கும் இடத்தில வேறு ஒரு விதையை ஊன்றலாம். இதனால் அங்காங்கே முளைக்காமல் இருக்கும் இடங்களில் நடும்பொழுது பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
  • ஒரு மாதம் வரை 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. செடி முளைத்த பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
  • மாதத்திற்கு ஒருமுறை தேவையற்ற களைகளை நீக்கி தொழுவுரம் அல்லது தழைச்சத்து விடுவதினால் நல்ல சாகுபடியை பெறலாம்.
  • தழைசத்துக்கள் அதிகமாக இடும் பொழுது வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். இதனால் நுனிகளை கிள்ளிவிடும் பொழுது பக்க கிளைகள் அதிகம் வளரும், பூக்கள்,காய்களும் அதிகம் காய்க்கும்.
  • பருத்தி விதைத்து 90 நாட்களுக்கு பின்பு ஊடு பயிராக உளுந்து அல்லது தட்டை பயறு ஆகியவற்றை பயிரிடலாம்.
பருத்தியை தாக்கும் நோய்கள்:
ஆல்டர்னேரியா இலைப்புள்ளிநோய்

அறிகுறிகள்:

சிறிய ஒழுங்கற்ற உருவம் கொண்ட திட்டுக்கள் (இலைப்புள்ளி) தோன்றும். அவற்றின் ஓரங்கள் அடர் அரக்கு நிறத்திலும் அதன் நடுப்பகுதி வெளிர் நிறத்தில் சருகு போல் ஆகி விடும்.

பாதிக்கப்பட்ட இலை காய்ந்து உதிரும்.

தண்டுகளில் மறு (பிளவை) தோன்றும்.

சில நாட்களில் காய்கள் பாதிக்கப்பட்டு உதிரும்.

பாதுகாப்பு முறை:

வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.

செடியின் காய்ந்த பாகங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அடித் தண்டுகள் (அறுவடைக்குப் பின்பு) அகற்றப்பட வேண்டும்.

ஆன்தராக்நோஸ் (கொல்லடோடிரைக்கம்):

அறிகுறிகள்:

வித்திலைகளில் சிறிய சிவப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

தண்டுகளில் உள்ள புண்கள் மூலமாக நோய்க் கிருமிகள் செடிகளைத் தாக்கும்.

அனைத்து வளரும் நிலையில் உள்ள காய்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்

பூஞ்சான் பஞ்சு மற்றும் வித்துக்களில் ஊடுருவி விடும்

பூஞ்சான் பஞ்சு அரக்கு நிறத்தில் காணப்படும். இலைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும்.

பருத்திக் காய்கள், சிறிய குழி போன்ற சிவப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.

நன்றாக பாதிக்கப்பட்ட வித்துக்கள்முளைக்கும் திறனை முழுவதுமாக இழந்துவிடும்.

தடுக்கும் முறைகள்:

நீர் தேக்கத்தை வயல்களில் தடுக்கவும்.

பாதிக்கப்பட்ட செடிகளின் மீதங்களை கண்டிப்பாக அகற்றிவிட வேண்டும்.

சாம்பல் நோய்:

முதிர் நிலையை அடைந்து கொண்டிருக்கும் செடிகளை இந்நோய் தாக்கும்.

முதிர் இலைகளில் ஒழுங்கற்ற சிறிய புள்ளிகள் தோன்றும்.

தவிர்ப்பு முறைகள்:

பாதிக்கப்பட்ட செடிகளை அழித்திடல் வேண்டும்.

தொடர்ச்சியாக பருத்தியை விதைக்கக் கூடாது.

வாடல் நோய் (ஃபுசேரியம் வேஸின்ஃபெக்டம்):

அறிகுறிகள்:

எல்லா வளர் நிலைகளிலும் இந்நோய் பாதிக்கும்.

வித்திலைகள் பழுப்பு / அரக்கு நிறத்தில் காணப்படும்.

இலைகள் நீர்ச்சத்தினை இழந்து வாடி பின் உதிரும்.

ஆணிவேர் குன்றிய வளர்ச்சி காண்பிக்கும். கிளை வேர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும்.

திசுக்கள் கருமையடையும்.

கரும்கோடுகள் காணப்படும்.

இலைகள் ஓரங்களிலிருந்து வெளிர ஆரம்பிக்கும்.

வாடல் முழுவதுமாக அல்லது பகுதியாக தோன்றும்.

கட்டுப்பாட்டு முறைகள்:

எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களை வளர்க்க வேண்டும்.

நிலத்தில் அதிகப்படியான நீரை வடித்திட வேண்டும்.

மூன்றிலிருந்து நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.

பயிர் அறுவடைக்கு பின்பு பயிர் மீதங்களை அகற்றிட வேண்டும்.

பயிர் வரிசைகளில் 50 கிலோ தொழு உரத்தில் கலக்கப்பட்ட 2 கிலோ டிரைக்கோடெர்மா கலவையை இட வேண்டும். இது நோய் தடுப்பிற்கு உதவும்.

கலப்புப் பண்ணையம் செய்தல் இந்நோய் தாக்குதலைக் குறைக்கும்.

சாம்பல் சத்து உரமிடுதல் இந்நோயை தவிர்க்கும் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரம் அதிகமானால் இந்நோய் தாக்குதலை அதிகரிக்கும்.

வேர் அழுகல் நோய்: (ரைசாக் போனியா படாடிகோலா):

அறிகுறிகள்:

செடிகள் திடீரென வாடிவிடும்.

இலைகள் பழுத்து, காய்ந்து விடும்.

பாதிக்கப்பட்ட செடிகளை சுலபமாக பிடுங்கி விடலாம்.

ஆணிவேர் அழுகிவிடும். சில கிளைவேர்கள் மட்டுமே செடியைத் தாங்கும். இதனால் செடிகளை சுலபமாக பிடுங்கி விடலாம்.

வேர் நுணிகள் வழவழப்புடன் காணப்படும்.

தடுப்பு முறைகள்:

பருத்தி செடிகளுக்கு, கல்லுப்பயிறு (நரிப்பயிறு) எனும் ஊடுபயிரை பயன்படுத்தலாம். இப்பயிர் நிழலைத் தந்து அதிக ஈரப் பதத்தைத் தக்க வைக்கும். தட்பவெப்ப நிலையைக் குறைக்கும். இது நோய் தாக்குதலை மட்டுப்படுத்தும்.

தட்பவெப்ப நிலை மிதமாக இருக்கும் பொழுது விதைக்க வேண்டும்.

தொழுவுரத்தில் (50கிலோ) டிரைக்கோடெர்மாவினைக் (2கிலோ) கலந்து பயிர் வரிசைகளில் இடவும்.

பருத்தியின் பயன்கள்:
  • பருத்தியின் இலையும் மொட்டும் மருத்துவ குணங்கள் கொண்டவை. இவற்றை அரைத்து பசும்பாலில் கரைத்து உட்கொண்டால் ரத்த நோய்கள் நீங்கும்.
  • பருத்தியின் விதைகள் பருத்தி கொட்டைகள் என்று அழைக்கப்படும். இது கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

தயவு செய்து உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் ஏரியாவில் பதிவிடவும். தவறுகளை சுட்டிக்காட்டி, உங்கள் கருத்துக்களை பரிமாறி இவ்வலைத்தளத்தை திறன்பட நடத்த உதவவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow