திருக்குறள் - குறள் 764

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: படையில். அதிகாரம்: படைமாட்சி.


திருக்குறள் - குறள் 764


அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

மு.வரதராசனார் உரை:
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

பரிமேலழகர் உரை:
அழிவு இன்றி - போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி - பகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படை - தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன


மணக்குடவர் உரை:
கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்- வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.


Translation:
That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.

Explanation:
That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்