திருக்குறள் - குறள் 611

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஆள்வினையுடைமை.


திருக்குறள் - குறள் 611


அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

மு.வரதராசனார் உரை:
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

பரிமேலழகர் உரை:
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை


மணக்குடவர் உரை:
ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்: முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால். இது வினைசெய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
'இத்தொழில் செய்து முடிக்க அருமையானது' என்று எண்ணி மனம் தளராதிருத்தல் வேண்டும். அதனை முடித்தற்கேற்ற பெருமையினைத் தனக்கு முயற்சி உண்டாக்குவதாகும்.

Translation:
Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.

Explanation:
Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்