திருக்குறள் - குறள் 587

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: ஒற்றாடல்.


திருக்குறள் - குறள் 587


மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

மு.வரதராசனார் உரை:
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.

பரிமேலழகர் உரை:
மறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.
(மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்

மணக்குடவர் உரை:
பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான். இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அறியப்பட வேண்டியவர்கள், மறைவாகச் செய்த செயல்களை அவர்களுக்கு உள்ளாயினரால் கேட்கவல்லவனாகி, கேட்டறிந்த செயல்களிலே பிறகு சந்தேகம் இல்லாதபடி துணிய வல்லவனே ஒற்றனாவான்.

Translation:
A spy must search each hidden matter out,
And full report must render, free from doubt.

Explanation:
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்