திருக்குறள் - குறள் 545

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: செங்கோன்மை.


திருக்குறள் - குறள் 545


இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

மு.வரதராசனார் உரை:
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

பரிமேலழகர் உரை:
பெயலும் விளையுளும் தொக்கு - பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட - நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.
('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை:
மழைபெய்தலும் விளைதலுங்கூடி, நூல் சொன்ன இயல்பினானே முறையை நடத்த வல்ல அரசனது நாட்டகத்தினவாம் என்றவாறு. இது மேற்கூறிய முறைமை செய்ய மழையும் விளைவும் உண்டாம் என்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலினைச் செலுத்தும் மன்னனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளைச்சலும் ஒருங்கே சேர்ந்து இருப்பனவாகும்.

Translation:
Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.

Explanation:
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்