திருக்குறள் - குறள் 1179
குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: கண்விதுப்பழிதல்.
திருக்குறள் - குறள் 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.
மு.வரதராசனார் உரை:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.
சாலமன் பாப்பையா உரை:
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.
பரிமேலழகர் உரை:
('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண
மணக்குடவர் உரை:
அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள். இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் வராதபோது அவர் வரவு பார்த்துக் கண்கள் துயிலவில்லை; வந்தபோது பிரிவாரோ என்று அஞ்சித் துயிலவில்லை. ஆதலால் இரு நேரங்களிலும் கண்கள் தூங்கமுடியாமல் துன்பத்தினை அடைந்தன.
Translation:
When he comes not, all slumber flies; no sleep when he is there;
Thus every way my eyes have troubles hard to bear.
Explanation:
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony.
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்