திருக்குறள் - குறள் 1049
குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: நல்குரவு.

திருக்குறள் - குறள் 1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.
மு.வரதராசனார் உரை:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
சாலமன் பாப்பையா உரை:
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.
பரிமேலழகர் உரை:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இ
மணக்குடவர் உரை:
நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது.
Translation:
Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.
Explanation:
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்