திருக்குறள் - குறள் 1041

குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: குடியியல். அதிகாரம்: நல்குரவு.


திருக்குறள் - குறள் 1041


இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

மு.வரதராசனார் உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

பரிமேலழகர் உரை:
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை. (இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று).


மணக்குடவர் உரை:
 நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.


Translation:
You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.

Explanation:
There is nothing that afflicts (one) like poverty.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்