சம்பங்கி பயிரிடும் முறை மற்றும் பயன்கள்
சம்பங்கி நீலக்கற்றாழையை ஒத்திருக்கும்.
இதன் சாறு நறுமண பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் ரஜினிகாந்தா என அழைக்கப்படுகிறது. இதற்கு இரவில் மணம் என்று பொருள்.
ஒரு செடியில் இருந்து வருடத்திற்கு 20 தண்டுகள் வரைக்கும் வளர்ந்து தினம் பூக்கும் தாவரமாகும்.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
ப்ரஜ்வல், மெக்ஸிகன் சிங்கிள், பியர்ல்டபுள், வைபவ், சுவாளினி, ஸ்ரீகார் போன்ற இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும்.
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தில் 2 டன் தொழுவுரத்தை இட்டு இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கை நிலம் முழுவதும் தூவி, உழவு செய்ய வேண்டும். அதன் பின் 3 அடி அகலம், முக்கால் அடி உயரத்தில் தேவைக்கேற்ற நீளம் கொண்டதாக ஒன்றரை அடி இடைவெளியில் பார்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதையளவு
எக்டருக்கு 1,12,000 கரணைகள் தேவைப்படும். கரணைகளை அறுவடை செய்து 30 நாட்கள் வைத்திருத்த பின்பே நடவுக்கு பயன்படுத்தவேண்டும்.
விதைநேர்த்தி
நடவிற்கு முன்பு 5000 பிபிஎம் சிசிசியில் (5 கிராம் / லிட்டர்) மூழ்கச்செய்து பின்பு கரணைகளை நடவு செய்ய வேண்டும்.
விதைத்தல்
தயார் செய்துள்ள பார்களில் 25 முதல் 30 கிராம் எடையுள்ள கரணைகளை 45 x 20 செ.மீ இடைவெளியில் 25 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
முதல் பத்து நாட்களுக்கு தினமும் தண்ணீர்விட வேண்டும். பிறகு, நிலத்தின் தன்மையைப் பொறுத்தும் காலநிலையைப் பொறுத்தும் பாசனம் செய்து கொள்ளலாம். ஆனால் சம்பங்கி வயலில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. அதனால் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.
உரங்கள்
ஒவ்வொரு பாசனத்தின் போதும் 150 லிட்டர் இயற்கை உரமான அமுதக்கரைசலைக் கலந்து விட வேண்டும். நடவு செய்த 3-ம் மாதம் ஒவ்வொரு செடியின் அருகிலும் மண்வெட்டியால் பறித்து, செடிக்கு ஒரு கிலோ என்கிற கணக்கில் ஆட்டு எருவை வைத்து, மண்ணால் மூடி விட வேண்டும். மாதம் ஒரு முறை 25 கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 50 கிலோ கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும்.
ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 20 கி.கி தழைச்சத்து தரவல்ல 44 கிலோ யூரியா, 80 கி.கி மணிச்சத்து தரவல்ல 500 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கி.கி சாம்பல் சத்து தரவல்ல 135 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
இரண்டு மாதங்கள் கழித்து ஒரு முறையும், பின் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும், மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை 44 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும.
பாதுகாப்பு முறைகள் ரோஜா
களை நிர்வாகம்
சிறிய செடியாக இருக்கும்பொழுது 10 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். பெரிய செடியாக வளர்ந்த பின் களை அதிகமானால் எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இதில் அதிகமாக நோய் தாக்குதல் காணப்படுவது இல்லை. இதில் காணப்படும் ஒரே பிரச்சனை நூற்புழு தாக்குதல் தான்.
நூற்புழு
நூற்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 கிலோ உயிர் பூஞ்சாணமான விரிடியை எருவில் கலந்து போடவேண்டும் அல்லது கார்போஃப்யூரான் குருணை மருந்தினை ஒரு செடிக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் இட்டு உடனடியாக நீர்ப்பாய்ச்சவேண்டும்.
அறுவடை
கரணைகள் முளைத்த பின்பு 80 முதல் 95 நாட்களில் பூக்களை அறுவடை செய்யலாம். பூக்களை நாள்தோறும் அறுவடை செய்ய வேண்டும். தினசரி சந்தையில் விற்பனை செய்யலாம். பூக்களின் விலை குறையும் போது சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு விற்பனைக்கு கொடுக்கலாம்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 14 முதல் 15 டன் மலர்கள் வரை கிடைக்கும்.
பயன்கள்
- சம்பங்கி பூக்களை பயன்படுத்தி மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி, தூக்கமின்மைக்கான தேனீர் தயாரிக்கலாம்.
- காய்ச்சிய பசும்பாலில் சம்பங்கி பூவை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். அஜீரணம், செரிமானக் கோளாறு ஆகியவை நீங்கும்.
- பூக்களை தேனீராக்கி குடிப்பதன் மூலம் வயிற்று வலி, பால்வினை நோய், காய்ச்சல், தலைவலி சரியாகும். வயிற்று கடுப்பை போக்க கூடியது.
- சம்பங்கி இலைகளை பயன்படுத்தி தைலம் தயாரிக்கலாம். இவற்றை தலையில் தேய்த்து குளிப்பதால் பொடுகு தொல்லை குறைவதோடு முடி நன்கு வளரும்.
- சம்பங்கி பூவை கூந்தலுக்கு சூடுவதால் மனம் இதமாகிறது. சம்பங்கி பூக்கள் தோல் நோய்களால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த கூடியது.
What's Your Reaction?